Sunday, June 26, 2011

கிருஷ்ணகிரி தமிழ் இணையப் பயிலரங்கம்



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை சரியாக 10 மணிக்கு தமிழ் இணைபயிலரங்க நிகழ்வுகள் துவங்கியது. முதல் நிகழ்வாக கவி. செங்குட்டுவன் அவர்கள் இந்நிகழ்வு நடத்துவதன் அவசியம் மற்றும் நடத்துவதற்கான சூழல் ஆகியவை பற்றி எடுத்துக்கூறி அறிமுக உரை நிகழ்த்தினார். முன்னதாக சிங்கப்பூரில் இருந்து பழனியப்பன் அய்யா அவர்கள் இணையம் மூலம் நிகழ்வுக்கான வாழ்த்துரை வழ்ங்கினார். பின்னர் துரை.மணிகண்டன் அவர்கள் தமிழும் கணினியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் அவர் கணினியில் தமிழ் வளர்ந்த வரலாற்றுச் செய்திகளையும், இணையத்தில் தமிழ் வளர்ந்த செய்திகளையும் அதற்கு தமிழ்

இணைய மாநாடுகள் எவ்வகையில் உதவியது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார். இடையில் திரு மா.சிவக்குமார் அவர்கள் தமிழ் எழுத்துக்கள் உருவான விதம் பற்றிக் கூறினார். அடுத்து திரு ஒரிசா பாலு அவர்கள் தமது கடலாய்வு அனுபவங்களை படக்காட்சிகளுடன் விவரித்தார். மேலும் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, பரவல் மற்றும் தமிழர் தொன்மை ஆகியவை பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார். அதற்கடுத்ததாக திரு சரவணன் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் கணினியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும், அதற்கான

சிறப்பு சாப்ட்வேர்களான ஜாஸ், ஈ ஸ்பீக்,என்விடிஏ ஆகியவை பற்றியும் தெளிவாகக் கூறினார் இத்தோடு காலை நிகழ்வுகள் நிறைவடைந்தது.

                  பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு துவங்கிய பிற்பகல் அமர்வில் திரு மா.சிவக்குமார் அவர்கள் மின்னஞ்சல் மற்றும் வலைப்பூ துவக்குதல் ஆகியவை பற்றி சிறப்பாக விளக்கியும் பார்வையாளர்களுக்கு நேரிடையாக செய்முறைப் பயிற்சியும் அளித்தது அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. அடுத்து கவி செங்குட்டுவன் மற்றும் துரை.மணிகண்டன் ஆகியோர் மின்நூலகம் பற்றி விளக்கினர் அதில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் போன்ற மின்நூலகங்கள் பற்றியும் அவற்றின் சேகரிப்பு பயன்பாடு பற்றியும் விரிவாகக் கூறினர்,
                         இறுதியாக பங்கேற்பாளர்களின் கருத்துரை மற்றும் பின்னூட்டம் வரவேற்கத்தக்கதாக அமைந்தது.
                    இந்நிகழ்வில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகியவற்றின் முதுகலைத் தமிழ் மாணவர்கள் முழுமையாகக் கலந்துக்கொண்டமையும், மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாமைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் முழுமையாகப் பங்கு பெற்றமையும் பாராட்டுக்குறியது.